இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – திருவேரகம்

இன்று சஷ்டி விழாவின் 4 – ம் நாள், வியாழக்கிழமையில் வந்துள்ளதால், முருகன் குருவாக உருவெடுத்த தலமாகிய, திருவேரகம் எனப்படும் சுவாமிமலை குறித்த திருப்புகழைக் கேட்டு மகிழ்வோம்.

தந்தையே ஆனாலும், குருவின் முன் எப்படிப் பணிதலுடன் கற்க வேண்டும் என்னும் ஞானத்தைக் கற்பித்த பாக்கியம் பெற்ற தலம்.
அதனால் கந்தனுக்கு, தகப்பன் சாமி என்ற பெயரும் உண்டு.
அறுபடை வீடுகளில் 4- வது தலம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப, சிறிய குன்று போல அமைக்கப்பட்ட இக்கோவிலில் உள்ள 60 படிகளிலும் 60 ஆண்டுகளின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

திருப்புகழ், நமது சொந்த முயற்சியில், முதன் முறையாகப் படிக்கும்போது மிகவும் கரடு முரடாகத் தோன்றும். ஆனால், பதங்களைச் சரியாகப் பிரித்து பொருள் உணர்ந்து அனுபவித்தால், உள்ளம் உருகுவதை நம் கண்கள் கசிந்து காட்டும். அது பண்ருட்டி பலாப்பழம் போல உள்ளிருக்கும் சுவையை உணர்த்தும்.

உதாரணமாக, முதுமாமறை என்று வேதத்துக்கு அடைமொழி சொல்லி, வேதம் எத்துணை பழமையானது என்பதை உணரும்போது நம்மையும் அறியாமல் ஆஹா என்று கூவாமல் இருக்க முடியாது.

இத்தனை பெருமைகளோடு உள்ள, இப்பதிகத்தை மனமுருகிப் பாடி வேண்டினால், புத்திர பாக்யம் கிட்டும் என்பதும் உண்மை. நம் குழுவினர் இல்லங்களிலும், குழலையும் யாழையும் தோற்கடிக்கும் தேமதுர மழலை கேட்க,

உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க்
கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே!

என வேண்டுகிறேன்! 🙏🙏🙏🙏🙏🙏

Leave a Comment