ஸ்வாசமே வாசமே!

கடற்கரை ஓரம் காற்று வாங்கப் போய், கடும் சளியை வாங்கி வந்தேன்.

நாசிகா மண்டலம் தாழ்வு மண்டலப் பகுதியாக மாறி, அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கப் பட்ட பிராந்தியம் ஆகி விட்டது. மூக்கு, குற்றாலமாக மாறி விட்டது. விளைவு, வாய், வாயு தேவனின் வாசஸ்தலமாக மாறி, ஆரோஹனம், அவரோஹணம் என ஸ்வர சஹித உறக்கம். இரவு முழுதும் அழுது, என் இரண்டு கண்ணும் பழுது என்பது, காலையில், கண்ணாடியில் தெரிந்தது. மேலும், பரிசாக, தொண்டையில் ஒரே கரகரப்ரியா சஞ்சாரம். மார்கழி மஹோத்சவம், ‘தை ‘- யிலும் தொடர்வது போல, பகலில், இல்ல சபாவில், கம்பீர நாட்டையில் பேசிப் பேசி இரண்டாவது குரல் எல்லோரின் விமர்சனத்துக்கும் ஆளானது. சம்பாவனையாக, ஆளுக்கு ஒரு வைத்தியம்.

இதையெல்லாம் தாண்டி, –
என்று தணியும் இந்த இருமலின் வேகம் – , என்று பேரனின் கேலிப் பாடல் சிரிப்பை வரவழைக்க, நான், அனைவருக்கும் பேசு பொருள், பாடுபொருள் என்றாகி விட்டேன் என்பது புரிந்தது.
“இது என்ன மாயம், எதுவரை போகும் ” – என்று எனக்கு நானே பாடிப் பார்த்துக் கொண்டேன். இன்றாவது, நித்ரா தேவி துணைக்கு வருவாளா என்ற கேள்விக் குறியுடன், சயன சௌஹர்யாவில் பிரவேசம் செய்கிறேன்.

Leave a Comment