வருக வருகவே 2024

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!

2023 இன் இறுதி நாளில் நன்றியாகவும், 2024 இன் தொடக்கத்திற்கு நல்ல முகவரியாகவும், நல்லதொரு அனுபவம் கிட்டியது.

பொங்கல் நாட்களில், கோவையில் குமாரி ஸ்பூர்த்தி – யின் நிகழ்ச்சி இருப்பதைப் அறிந்து, ‘ அடடா கோவையில் இப்போது இல்லையே ‘ என்று ஆதங்கப் பட்டேன். ஆனால் கடவுள் மிகவும் கருணை உள்ளவர் என்று புரிய வைத்தார். இன்று எதிர்பாராத விதமாக, பாண்டியில், அவரது நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிய வந்ததால் நாங்கள் சென்று அனுபவித்து வந்தோம். ‘ குமாரி ‘ என்று அழைக்கப் பட்டாலும் இன்னும் குழந்தைதான். ஆனாலும் அசாத்தியமான திறமை. எல்லாம் கடவுளின் கருணை. சங்கீதம் கற்றுக் கொண்டுதான் பாடுகிறார் என்றாலும், பாடுகின்ற தருணங்களில் தெய்வீகம் புரிகிறது. ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்று பாராட்டி ரசிக்கும் தருணங்கள் இயல்பானவை. ஆனால், தான் பாட வேண்டிய பாடல்கள் அனைத்தையும் காதுக்கு விருந்தாகவும், மனதிற்கு மருந்தாகவும் பரிமாறினார். 2 மணி நேரம் ஒரு தியான நிலையில் இருப்பது போன்ற உணர்வு.
விநாயகர் வந்தனத்தில் ஆரம்பித்து, – மொழிக்கு ஒன்று – என, பல பாடல்களை, பழரசமாய்ப் பரிமாறினார். இடையில் நேயர் விருப்பமாகக் கேட்ட 2 பாடல்களையும் பாடினார்.

இறுதிப் பாடலாக, – மைத்ரீம் பஜத,- பாடலை ஆரம்பித்த உடன் மனம் உருக ஆரம்பித்ததை உணர முடிந்தது. அதிலும்
युद्धं त्यजत स्पर्धां त्यजत
त्यजत परेषु अक्रममाक्रमणम्
என்ற வரிகளை, நெகிழ்ந்த குரலில் பாடிய போது உண்மையில் நெஞ்சு கனத்தது.
அப்படிப்பட்ட அமைதியான சூழலைத்தானே அனைவரும் வேண்டுகிறோம், தேடுகிறோம். இந்தப் பிஞ்சுக் குரலின் வேண்டுதலுக்காகவாவது இந்த நிலை ஏற்பட வேண்டும்.

அப்படி உருகி உருகி வேண்டிய அந்தக் குரல், கடைசி வரிகளான –
श्रेयो भूयात् सकलजनानाम् என்று 3 முறை பாடும்போது, எங்கிருந்து அந்த வீரம் வந்தது என்றே புரியவில்லை.
सर्वे जना सुखिनो भवन्तु என்ற கொள்கையைக் கொண்டாடும் பாரத தேசம், நம் தேசம் என்று உணரும்போது பெருமையாகவும் உள்ளது.

பாடகருக்கு மரியாதை செய்வது என்ற வகையில், விளம்பரத்திற்கு பேர் போன பாண்டி மக்கள், ஆளுயர மாலை அணிவித்தனர். சிறு குழந்தை போல அதை 2 கைகளாலும் பிடித்துக் கொண்டு, மேடை முழுவதும் யானைக்குட்டி நடப்பது போல ஆடி ஆடி நடந்ததைப் பார்த்தபோது, பேபி ஸ்பூர்த்தி – யைக் காண முடிந்தது.

மொத்தத்தில், இன்று கிடைத்த அனுபவம், 2024-க்கான வாழ்த்து எனவும் புரிந்தது.

ராமபிரானின், ஜன்ம பூமியில், கோலாகலமாக இந்த ஆண்டு மீண்டும் அவதாரம் நடக்க உள்ளது. இந்த விஸ்வரூப வெற்றியால், பாரதம் விஸ்வத்திற்கு, ஒரு விலாசமாக அமையும்.

वन्दे भारत्! वन्दे मातरम्!

Leave a Comment