மார்கழியில் சில பார்வைகள்!

புள்ளின் வாய்க் கீண்டானை, – என்பது பகாசுரனைக் குறிப்பது புரிகிறது. ஆனால், அதென்ன, பொல்லா அரக்கனை – என்ற அடைமொழியுடன் கூடிய பதம், இராவணனைக் குறிக்க பயன் படுத்தப் பட்டுள்ளது? அரக்கன் என்றாலே பொல்லாதவன்தானே? பின் எதற்கு அந்தப் பிரயோகம்? அங்குதான் ஆண்டாளின், மொழியருமை தெரிகிறது. அதே கால கட்டத்தில், விபீஷணன் என்ற ஒரு நல்ல அரக்கனும் இருந்ததால், இராவணனை, ‘ ‘பொல்லா ‘ என்ற அடைமொழியுடன் விளக்கி உள்ளாள். அது மட்டுமல்ல, தன் வயதுக்கே உரித்தான விளையாட்டு மொழியில், இராவணனை – கிள்ளிக் களைந்தானை என்று இராமனையும் கொண்டாடுகிறாள்.

அடுத்ததாக, மாதவனைப் பாடித் துதிக்க வேண்டிய நேரத்தில், உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை, போதரிக் கண்ணினாய் என்று அழைக்கிறாள். போது என்றால், தாமரை மலர் என்று பொருள்படும். அத்தகைய தாமரை மலர் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த அழகிய கண்களால், அந்த மாயக் கண்ணனைப் பாராமல் உறங்குதல் முறையா என்று சாடுவதோடு, உறங்குவது போன்ற கள்ளத் தனத்தை விடுத்து, குளிர்ந்த நீரில் நீராட வா என்றும் அழைக்கிறாள். இதில் நீராட என்னும் உபயோகம், கண்ணனைப் போற்றும் நாம சங்கீர்த்தனத்தில் திளைக்க அழைப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

ஆண்டாளின் காலத்தை நிர்ணயிக்க, முதல் மற்றும் ஏழாம் பாசுரங்களோடு, இந்தப் பாசுரமும் உதவுவதாகவும் செய்தி உண்டு.

பக்தி, மொழி, அறிவியல், எளிமை என்பன போன்ற பன்முக விளக்கங்களை எளிதாக விளக்கும், ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையை, இந்த 30 நாட்கள் மட்டுமன்றி, 365/366 நாட்களும் பாடினால், இன்னும் எத்தனையோ அற்புதங்களை அறியலாம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Leave a Comment